21.1.2017 - கோலாலம்பூரில் நடைபெற்ற த.ம.அ கருத்தரங்கம்


2017ம் ஆண்டின் முதல் நிகழ்வாக "பண்பாட்டு மீட்சிக்கான தேடல் - பன்னாட்டுப் பார்வையில்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். தமிழர் பண்பாட்டில் இறையியல் கூறுகளை மையப்படுத்தி இந்த ஒரு நாள் கருத்தரங்கு திட்டமிடப்பட்டிருந்தது. இளம் தலைமுறையினர் அதிகமாகக் கலந்து கொள்ளும் வகையில் பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்திகள் பரிமாறப்பட்டதால் அதிகமான இளைஞர்கள் இந்தக் கருத்தரங்கில் வந்து கலந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது.

இக்கருத்தரங்கில் நான்கு வெவ்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவாளர்களது உரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.



முதல் சொற்பொழிவு தமிழ் பௌத்தம் பற்றியது. தமிழகத்திலிருந்து வருகை செய்திருந்த எழுத்தாளர்.திரு.கௌதம சன்னா அவர்கள் இந்தச் சொற்பொழிவை வழங்கினார். தமது உரையில் புத்தரின் வரலாறு தொடர்பான செய்திகளிலிருந்து தொடங்கி, அவர் அரண்மனையிலிருந்து வெளியேறியமைக்கான, வழக்கில் இருக்கும் கதைக்கு முற்றிலும் மாறுபாடான ஒரு கருத்தினை முன் வைத்து புதிய தகவல்களை வழங்கினார். புத்தரின் கொள்கைகள், அவரது துறவு அது தொடர்பான தேடல்கள், புத்தமத பிரிவுகள், தமிழில் உள்ள புத்த இலக்கியங்கள், பாலி மொழி தொடர்பான தகவல்கள் மட்டுமன்றி இன்று தமிழர் வாழ்வியலில் வழக்கில் இருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகளில் கலந்திருக்கும் பௌத்தத்தின் தாக்கம் பற்றியும் அவரது சொற்பொழிவு அமைந்திருந்தது. முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருந்த இச்சொற்பொழிவு, வந்திருந்த பார்வையாளர் மத்தியில் குறிப்பிடத்தக்க கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மண்ணில் மட்டுமன்றி மலேசிய சூழலிலும் பௌத்தத்தின் தாக்கம் பற்றி விரிவான ஆய்வுகள் நிச்சயம் தேவை என்பதை உறுதி செய்வதாக அமைந்திருந்தது.

உரையைக் கேட்க!




இதனைத் தொடர்ந்து எனது சொற்பொழிவு இடம்பெற்றது. தமிழர் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் குல தெய்வ வழிபாடு பற்றியும் நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றியும் இந்த உரையில் தகவல்கள் வழங்கினேன். தமிழகத்துக்கான எனது களப்பணிகளுக்கான பயணங்களில் நான் சேகரித்த நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய விபரங்களை வழங்கினேன். இதில் சாமிகள் பற்றிய பின்னணியில் இருக்கும் கதைகள், செவி வழிச்செய்திகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் என்பன பற்றிய செய்திகளையும் வழங்கினேன். தமிழகத்திலிருந்து அன்றைய மலாயாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாடுகளை தாங்கள் புலம்பெயர்ந்த மலாயாவிலும் ஏற்படுத்தி, இன்று அக்கோயில்கள் பெரிய அளவில் மக்களால் வழிபடப்படும் நிலை இருப்பதையும் எனது சொற்பொழிவில் பகிர்ந்து கொண்டேன்.

உரையைக் கேட்க!




மதிய அமர்வில் முதல் பேச்சாளராக பேரா.நா.கண்ணன் தனது கட்டுரையை வழங்கினார். பன்முகத்தன்மையில் எவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கி தமிழர் வாழ்வில் வழிபாட்டுக் கூறுகள் அமைந்தன என்பதை சுட்டிக் காட்டுவதாக அவரது சொற்பொழிவு அமைந்தது. பக்தி நிலை பற்றி விரிவாகத் தனது சொற்பொழிவில் விளக்கம் அளித்தார். அத்தோடு வைஷ்ணவ பாரம்பரியத்தில் பக்தி நிலை பற்றி குறிப்பிட்டு ஸ்ரீ ராமானுசரின் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களையும் முன் வைத்து தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

உரையைக் கேட்க!






இந்தக் கருத்தரங்கில் இறுதி சொற்பொழிவாக அமைந்தது திரு.ஒரிசா பாலு அவர்களின் வள்ளலார் பற்றிய ஆய்வுரை. வள்ளலாரின் சன்மார்க்க கருத்துக்களை எளியத் தமிழில் வந்திருந்தோர் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக தனது உரையில் விளக்கமளித்தார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலாரைப் போலவே தற்சமயம் தமது பயிர்கள் காய்ந்து கருகி மடிவதைக் கண்டு மனம் தாளாது மடிந்த தமிழக விவசாயிகளைத் தனது உரையில் நினைவு கூர்ந்தார். வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை விட ஆறாம் திருமுறையை வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற தன் கருத்தை முன் வைத்ததோடு வள்ளலாரை இறைவனாகப் பார்க்காமல் நல்ல சக மனிதராக, வழிகாட்டியாகப் பார்த்தால் அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்ளலாம் என்ற அருமையான கருத்தையும் முன் வைத்தார்.

உரையைக் கேட்க!

குறிப்பு: ஒலிப்பதிவுகளைச் செய்து வழங்கிய மலர்விழி பாஸ்கரனுக்கு நம் நன்றி

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comments:

youarekalam | March 3, 2017 at 10:10 PM

தமிழ் வரலாறு =பழமையான வரலாறு.அற்புதமான பணி.பாராட்டுக்கள்

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness