பெண்ணையாற்று நடுகற்கள்



நண்பர்களே,

கிருஷ்ணகிரி நகரில் பெண்ணையாற்றங்கரையோரத்து சாலைகளில் ஆங்காங்கே நடுகற்களைக் காணமுடிகின்றது. சில நல்ல நிலையில் வழிபாட்டுக்குத் தகுந்த நிலையில் பாதுகாக்கப்பட்டாலும் சில பாதுகாப்பாற்றும் புதர்கள் மண்டியும் மறைந்து இருக்கின்றன. த.ம.அ குழுவினர் கிருஷ்ணகிரி சென்றிருந்த போது உடன் வந்து அந்த நடுகற்கள் பற்றி விளக்கம் அளிக்கின்றார் திரு.சுகவனம் முருகன். படங்களையும் ஒலிப்பதிவையும் கான இங்கே செல்க!


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

பெண்ணேஸ்வரர் திருக்கோயில்


பெண்ணேஸ்வரர் திருக்கோயில்
பதிவு:05.03.2012
ஒலிப்பதிவு: சுபா 
படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், சுபா 


தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம் முருகன் அவர்கள் கூறக்கேட்டு பதிவு செய்து வந்தனர். இப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் : செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் சுகுமாரன், டாக்டர்.நாகண்ணன், சுபா ஆகியோர்.




மேலும் படங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பதிவுகளின் விளக்கங்களையும் காண தமிழ் மரபு அறக்கட்டயின் வரலாற்றுப் பகுதியில் இங்கே செல்க!

சொல்லோவியம்: கார்த்திகேசு சிவத்தம்பி




சமீபத்தில் மறைந்த யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பற்றிய மிக அரிய சேதிகளூடான ஓர் சொல்லோவியம். 

தயாரித்து அளிப்பவர் இளையதம்பி தயாநந்தா.

சொல்லோவியம் கேட்க!!

தூத்துக்குடி பவளப்பாறைகள்


தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ளது வ.உ.சி. கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஜியாலஜி துறை ஆய்வாளர்-விரிவுரையாளர் டாக்டர்.உதயனப் பிள்ளை அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தூத்துக்குடி ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள தீவுகள், பவளப் பாறைகள், முத்துக்குளித்துறை தொடர்பான பல விஷயங்களைப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். பேட்டிகள் 4 பகுதிகளாக உள்ளன.

பேட்டி பதிவுகள்:11.3.2011
ஒலிப்பதிவும் படங்களும்: சுபா 
ஏற்பாடு உதவி: திரு.துரை.ந.உ.

பேட்டிகளைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இங்கே செல்க!.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி


வணக்கம்.



தூத்துக்குடிக்கு 2011ம் ஆண்டில் நான் சென்றிருந்த போது வ.உ.சி. கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. திரு. துரை அவர்களும் என்னுடன் வந்திருந்தார்கள். அச்சமயம் வ.உ.சிதம்பரம் அவர்களின் பெயரில் இயங்கி வரும் கல்லூரிக்குச் சென்றிருந்தோம். கல்லூரி முதல்வர் இக்கல்லூரியை விளக்கி அறிமுகம் செய்யும் ஒரு பேட்டியினைப் பதிவு செய்திருந்தேன். கல்லூரி முதல்வர் திரு.ப்ரான்ஸிஸ் அவர்கள் இப்பேட்டியை வழங்குகின்றார்கள்.



இப்பேட்டியில்

  • 1951ம் ஆண்டு வ.உ.சியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி.
  • வ.உ.சி. கல்விக்கழகம்
  • வ.உ.சி நினைவாக ஒரு மணி மண்டபம் கட்டலாம் என்று தொடங்கிய இத்திட்டம் பின்னர் சமூகத்திற்கு கல்விச் சேவை வழங்கும் வகையில் பயன்படும் வகையில் கல்லூரியாக ஏற்படுத்தப்பட்டது. 
  • வந்தே மாதரம் என்ற கோஷம் பொறிக்கப்பட்ட முகப்புடன் இக்கல்லூரி உள்ளது.
  • சமயச் சார்பின்மைக்கு வாழும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது இக்கல்லூரி. இக்கல்லூரியை ஏற்படுத்தியவர்கள் தீவிர சைவ சமயத்தினராக இருந்தாலும் இக்கல்லூரியில் எங்குமே சமயச் சின்னங்கள் இல்லாமல் சமயச் சார்பின்மை இல்லாமல் கல்வியை மட்டுமே முன்னிலைப் படுத்தி ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர்.
  • கல்லூரியில் இயங்கி வரும் துறைகள் ஆய்வுகள் 
என சில தகவல்களை கல்லூரி முதல்வர் வழங்குகின்றார்.

பேட்டியைக் கேட்க!



குறிப்பு: பயணத்திற்கான உதவிகள் செய்த திரு.திருமதி துரை, திருமதி சீதாலட்சுமி ஆகியோருக்கு என் நன்றி.


வ.உ.சி அவர்கள் பற்றிய சில பதிவுகள் நமது வலைத்தளத்தில் உள்ளன அவற்றை

ஆகிய பக்கங்களில் காணலாம்.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

திரு.எஸ்.ராமச்சந்திரனின் சில சமூகவியல் கருத்துக்கள் -2


இவ்வொலிப்பதிவின் முதல் பகுதியில் நாட்டார் வழக்காற்றியல், சமூகத்தில் அடிமைகள், தாசி என்பன பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. அவற்றை இங்கே வாசித்தும் கேட்டும் மகிழலாம்.

இன்றைய பதிவில் இடம்பெறும் தகவல்களைக் காண்போம்.

பதிவு 1 - விஷ்வபிராமணர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
  • விஷ்வ பிராமணர்கள் எனப்படுபவர்களின் வழக்குகள்
  • தைத்ரிய சம்ஹிதை என்பதன் பொருள்
  • சூத்ரங்கள் - அதன் உட்பொருள்கள்
என்பன போன்ற தகவல்களை வழங்குகின்றார்.



பதிவு 2 - தூத்துக்குடியும் உப்பு வணிகத்துறையும்



இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
  • எப்படி முத்து அரசனுக்கு சொந்தமோ அதே போல உப்பு அரசனுக்கு சொந்தம் என்பது வழக்கு. 
  • தூத்துக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகம் உள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக இத்தொழில் ஈடுபட்டவர்கள் பண்ணையார் என்று அழைக்கப்படும் ஒரு சமூகத்தினர். 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களிலேயே இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன; சித்திரவல்லி என்ற பட்டத்தோடு இவர்கள் குறிப்பிடப்படுகின்றார்கள். 
  • உப்பளத் தொழிலில் தூத்துக்குடி பரதவர்கள் அதிகம் ஈடுபடவில்லை. 
  • நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உப்பு வியாபரத்தில் அதிகம் ஈடுபட்டிருக்கின்றனர்.
  • ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் எனும் நாவல் உப்பளத்து மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒன்று. 
  • உப்பளத்தில் பணியாற்றும் மக்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்க்கைச் செய்திகளைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு நாவல். 
இப்படி இவ்வொலிப்பதிவு செல்கையில் ராஜம் கிருஷ்ணனின் களப்பணிகள் பற்றி திருமதி.சீதாலட்சுமியும் விவரிக்கின்றார்.



பதிவு 3 - பாண்டியர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 

கான் சாஹீப் எழுதிய கடிதம்
  • 1756ல் தென்காசி கோயிலைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவர்கள் புலித்தேவர்கள். இவர்கள் 11 பேரை சுட்டு கொன்று தென்காசி பகோடாவை தனது ஆளுமைக்குள் கொண்டுவந்ததாக கான்சாஹீப் கடிதம் எழுதுகின்றான்.
  • 1754ம் ஆண்டைச் சேர்ந்த தென்காசிப்பாண்டியர்களின் செம்பு பட்டையம் குற்றாலம் கோயிலில் உள்ளது.
  • புலித்தேவர் சமூகத்தின் வம்சமும் ஜாதியும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. புலித்தேவரும் அவர் சமூகத்தினரும் மறவர் குலத்தினர் என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் வம்சத்தாரும் இணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  
  • தென்காசி பாண்டியர்கள் 18ம் நூற்றாண்டில் பலமாக இருந்த ஒரு தமிழ் பேசும் மறவர்கள் சமூகத்தினராக இருந்தனர். இவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனாலும் தென்காசி ஊரின் வரி வசூல் உரிமை பாண்டியர்களிடம் அப்போது இல்லை. இந்த உரிமை வடகரை ஜமீனிடம் இருந்திருக்கின்றது.
  • எந்த பாளையப்பட்டுக்களும் தாம் பாண்டியர் வம்சத்தவர்கள் என்று தங்கள் உரிமையைக் கோரவில்லை.
கங்கைகொண்டான் சீர்மை நாடாள்வார் என்கின்ற பட்டமுடைய நாடாட்சி மரபினர் வேறு, மறவர்கள் வேறு என்பது தெளிவு என்று உறுதிபடுத்துகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்.
ஏறக்குறைய 30 நிமிட ஒலிப்பதிவு இது. புதிய விஷயங்கள் தெளிவான ஆண்டு வாரியான தகவல்களை வழங்குகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்


பதிவும் படங்களும் :சுபாஷினி 
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011

பேரா.பா.ரா.சுப்பிரமணியனுடன் இலண்டனில் ஓர் உரையாடல்

கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதியின் பிரதம ஆசிரியர், மொழி அறக்கட்டளையின் Contemporary Tamil Prose Writer (with notes, translation and glossary), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சையின் ‘தமிழ் நடைக் கையேடு’ ஆகிய வெளியீடுகளுக்குக் காரணமாயிருக்கும் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள் 2012 ஏப்ரல்-மே மாதங்களில் லண்டன் வருகை புரிந்தார். அது சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓர் நீண்ட கலந்துரையாடல் நடந்தது. அவைப் பகுதிகளாக கீழே வழங்கப்படுகின்றன:

பகுதி ஒன்று கேட்க!
பகுதி இரண்டு கேட்க!
பகுதி மூன்று கேட்க!
பகுதி நான்கு கேட்க!
பகுதி ஐந்து கேட்க!
பகுதி ஆறு கேட்க!

லண்டனின் இசைக்குயில் மாதினி

கடந்த கால் நூற்றாண்டுகளாக லண்டன் மாநகரிலிருந்து தமிழிசைச் சேவை செய்துவரும் மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களைத் தமிழ் அரபு அறக்கட்டளை பேட்டி கண்டது. 
அவரது சமீபத்திய இசைப்பேழைகள்:
சிவபுராணம், பண்ணிசைப்பாமாலை, நெஞ்சையள்ளும் கீதம் போன்றவை.


அவரது இனிய பாடல்களும் பேட்டியும் கீழே!


குயிலே உனக்கு அனந்தகோடீ நமஸ்காரம்! எனும் பாடல். 


இன்குரல் இசைகளும்! எனும் பாடல்.


நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்! எனும் பாடல்.


திருவாதவூராரின் சிவபுராணம்.


திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா தமிழ் மரபு அறக்கட்டளைக்கு லண்டன் இல்போர்டு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மே 30, 2012 அன்று அளித்த பேட்டி!


30 நிமிடங்கள் ஒலிக்கும் நேர்காணல்


சமீபத்தில் மண்ணின் குரலில் வெளியான அவரது ஈழத்துக் கவிஞரின் தமிழ்த் தாய்வாழ்த்து கேட்க!


கோமா கோதண்டம் - ஏலக்காய் தோட்டத்து மலைவாழ் மக்களின் வாழ்க்கை




இவரது முதல் நாவல் - ஆரண்ய காண்டம். மலைபடுவாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சூழலை விளக்கும் ஒரு நாவல். சேத்தூருக்கு மேலே, சிவகிரிக்கு மேலே இருக்கின்ற ஏலக்காய் எஸ்டேட்களில் இருக்கின்ற மலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு நாவல். அம்மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படித்து அதன் அடிப்படையில் இவர் உருவாக்கிய ஒரு நாவல்.

இந்த நாவலைப் பற்றி விளக்கும் போதே இதன் தொடர்பில் ஏலக்காய் எஸ்டேட்களில் இருக்கின்ற சூழலையும் மிக ஆழமாக விளக்குகின்றார் இந்தப் பேட்டியில்.இந்த நூல் இந்தியாவின் சிறந்த புத்தகமாக ஜனாதிபதியின் பரிசு பெற்ற ஒரு நூல்.

இவரது நாவல்கள் ஏலச் சிகரம். கிறிஞ்சாம் பூ போன்றவை மலைவாழ் மக்களின் குறிஞ்சித் திணை மக்களின் வாழ்க்கையை அலசுவதாக அமைந்துள்ளமை தனிச் சிறப்பு.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. அன்றாட வாழ்க்கையை மட்டுமே கவனித்தக்கதாக அமைந்தது இவர்களது வாழ்க்கை. சமுதாயம், கற்பு நிலை, வருங்காலத்திற்கு சேமித்தல் என்பன போன்ற சிந்தனைகளே தோன்றாத ஒரு சூழலில் வாழ்பவர்கள். நிரந்தரமான குடிசைகள் அற்ற நிலையில் தங்குவதற்கும் இடமில்லாமல் கஷ்டப்பட்ட மக்கள் இவர்கள். இம்மக்கள் பழையர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர். சாதிப்பெயரைச் சொல்லி திட்டுவது அடிப்பது போன்றவற்றை தவிர்ப்பதற்காக ஒரு குழுவை அப்போதைய அரசு ஏற்படுத்தியது. கிராமத்தில் கலெக்டருடன் சேர்ந்து திரு.கோமா கோதண்டம் அவர்களும் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டிருந்தார். மலைவாழ் மக்களைப் பற்றி தொடர்ந்து இவர் எழுதி வந்த நாவல்களினால் ஏற்பட்ட தாக்கம் இவர் இவ்வகைப் பணியில் ஈடுபட தகுதியானவர் என்ற வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது. அதன் அடிப்படையில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி ஆர்ம்பித்தது.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை வித்தியாசமானது. நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பவர்கள் அல்ல. ஒரு நாள் ஒரு ஊரில் என நகர்ந்து நகர்ந்து செல்வதால் இவர்கள் நிரந்ததரமாக ஓரிடத்தில் இருக்கும் வகையில் இவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதில் கூட சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. இவைகளைச் சேகரித்து கணக்கெடுப்பு எடுத்து வீடுகட்ட பணிகள் நடந்தது.  இதன் அடிப்படையில் அச்சமயம் 20 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவ்வகையில் வீடுகள் கட்டி கொண்டிருக்கும் போது இவரே நேராகச் சென்று பார்க்கையில் தரமில்லாத பொருட்களைக் கொண்டு அவ்வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தமை பற்றியும் அதற்கு அவர்கள் தெரிவித்த காரணங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் நம்முடன் பகிர்ந்து கொள்கின்ற்றர்.

கோமா கோதண்டம் அவர்கள் 300க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள் எழுதியிருக்கின்றார். இவை குறிஞ்சித் திணை மிருகங்களைப் பற்றி அமைந்தவை. நேரடியாக மலைப்பகுதிக்குச் சென்று அங்குள்ள வன விலங்குகளைப் பார்த்து அவற்றின் தன்மைகளை மனதில் உருவகித்துக் கொண்டு இவர் கதைகளைப் படைத்திருக்கின்றார்.

இவரது களப்பணிகளை அந்த நாட்களுக்கே சென்று சுவாரசியமான அந்த ஞாபகங்களை நம்முடன் இப்பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார். காட்டில் செல்லும் போது யானை வந்த கதை, உப்பு தின்ற ஒரு குறங்கு பற்றிய கதை.. காட்டில் களப்பணிக்குச் சென்ற போது தீப்பற்றிக் கொண்ட கதை என சில கதைகள் ஏற்பட பின்னனியாக அமைந்த் காரணங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்.

இதுவரை 83 நூல்கள் இவரது எழுத்தில் வெளிவந்துள்ளன. மேலும் 14 நூல்கள் பதிப்பகத்தாரிடம் வெளியீட்டிற்காக உள்ளன. பேட்டி எடுத்துக் கொண்டிருந்த சமயத்திலும் 2 நூல்கள் எழுதிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

திரு.கோமா கோதண்டத்தின் முந்தைய பதிவாக புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றிய இரண்டு ஒலிப்பதிவுகள் முன்னர் வெளியிட்டிருந்தேன். அதனை இங்கே காணலாம். http://voiceofthf.blogspot.de/2011_06_01_archive.html  அதன் தொடர்ச்சியாக இப்பதிவினை இன்று வெளியிடுகின்றேன்.

கேட்டு மகிழுங்கள்.

பதிவினைக் கேட்க!

அன்புடன்
சுபா

Lettered Dialogue - Book Release function

Lettered Dialogue, a collection of selected letters with commentary by Mr.Narasiah. The letters were exchanged between Chitti (P.S. Sundararajan) and Krithika (Mrs.Mathuram Boothalingam).

Click Here To listen to the audio recording.

Welcome Speech by: Mr. S.Muthiah
About the book by the Author: Mr.K.R.A. Narasiah
Special Addresses: Mr. Gopalakrishna Ghandi, Mr.K.Subramanian













திரு.எஸ்.ராமச்சந்திரனின் சில சமூகவியல் கருத்துக்கள்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுகளுக்காக 2011ல் நான் தமிழகம் சென்றிருந்த போது திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களுடன் செய்யப்பட்ட ஒரு பேட்டியின் இரண்டு பதிவுகள் இந்த மண்ணின் குரல் வெளியீட்டில் இடம்பெறுகின்றன. திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல், சமூகவியல், வரலாற்று ஆய்வாளர். இவரது மேலும் சில கட்டுரைகளும் ஒலிப்பதிவுகளும் முன்னரே நமது வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேலும் இரண்டு பதிவுகள் தொடர்கின்றன.



பதிவு 1


  • நாட்டார் வழக்காற்றியல் என்பது சரியான பதமா?
  • செம்மொழி, செவ்வியல் என்பதன் பொருள் என்ன?
  • கொடுந்தமிழ் செந்தமிழ் இரண்டுக்குமான் சமூகவியல் விளக்கம்.
  • கிராமிய தெய்வங்களும் பெருந்தெய்வங்கள் எனக் குறிப்பிடப்படும் தெய்வங்களையும் வெவ்வேறு சமூகங்களுக்கு உரியன என சொல்லப்படுவது சரியா?
  • வேற்றியல் பொதிவியல் பற்றிய விளக்கம்.

இவற்றுடன் ராவணன் பற்றிய ஒரு சுவையான ஒரு குறிப்பையும் தருகின்றார்


பதிவு 2 


சமூகத்தில் அடிமைகள் - இது ஒரு கலவையான பதிவு.  திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஒப்பந்தக் கூலி, ஆப்பிரிக்காவில் ஒப்பந்தக் கூலிகளின் நிலை, காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க உரிமைப்போராட்டம், தில்லையாடி வள்ளியம்மை பற்றிய தகவல்கள் எனப் பகிர்ந்து கொள்கின்றார். தொடர்ந்து திருமதி.சீதாலட்சுமி தமது ஆஸ்திரேலிய பயண ஆய்வு அனுபவத்தில் அங்கு பெண்கள் சமூகத்தில் நிகழ்ந்த சில சமூக அவலங்களைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களோடு திரு.நடேச நாடாரும் தனது கருத்துக்களை இடைக்கிடையே பகிர்ந்து கொள்கின்றார்.



பதிவு 3


  • தாசி என்ற சொல்லின் பண்டைய பொருள்..
  • சமூகவியல் பார்வையில் ஜாதிகள்
  • வைசியர்கள் எனப்படும் குழுவில் அடங்குபவர்கள் வர்த்தகம் செய்யும் குழுக்கள் மட்டுமல்ல எனக் கூறி இக்குழுவில் பண்டைய காலத்தில் அடங்கிய உப குழுக்கள் பற்றிய விளக்கம்
  • பிராமணர்கள் எனப்படும் குழுவில் அடங்குபவர்கள் வைதீக பிராமணர்கள் கோயில் குருக்கள்கள் மட்டுமல்ல எனக் கூறி இக்குழுவில் பண்டைய காலத்தில் அடங்கிய உப குழுக்கள் பற்றிய விளக்கம் 
  • ஷத்திரியர்கள் எனப்படும் குழுக்கள் 

என விளக்கம் செல்கின்றது.

இந்த உரையாடலின் போது திருமதி சீதாலட்சுமி அவர்கள் ராஜாஜி அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.


  • சுயமரியாதை இயக்கம் 
  • ஜாதி என்பதன் தோற்றம், அதிகார போதை
  • ஜாதி தோற்றத்துக்கு முற்பட்ட சமூக நிலை
  • ஜாதி சண்டைகள், ஜாதியினால் ஏற்படும் சமூக அவலங்கள் 

பற்றி சீதாலட்சுமி அவர்களின் கருத்துக்கள் தொடர்கின்றன.


  • வர்ணம் என்பதற்கும் ஜாதி என்பதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி மேலும் திரு. எஸ்.ராமச்சந்திரன் தொடர்கின்றார்.
  • இரண்டு ஜாதியின் கலப்பில் பிறக்கும் ஒரு குழந்தை மூன்றாவது ஜாதியாக மாறுமா..? சில கல்வெட்டுச் சான்றுகள்.
  • கி.பி 13ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஜாதி எனப்படும் சமூக அமைப்பில் உள்ள நிலையே தற்கால நிலை வரை தொடர்வது 

என்று தனது விளக்கத்தை வழங்குகின்றார் திரு.எஸ்.ராமச்சந்திரன்.


பதிவு:சுபாஷினி 
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ராஜபாளையம்: ராஜூக்கள் சரித்திரமும் பருத்தி உற்பத்தி தொழிலும்




வணக்கம்.

ராஜபாளையம் என்றால் நினைவுக்கு வருபர்கள் ராஜூக்கள் சமூகத்தினர்.; நினைவுக்கு வருவது பருத்தி வியாபாரம். இந்த ராஜூக்களைப் பற்றி தெரிந்து கொள்ள நான் மேற்கொண்ட முயற்சியில் எனக்கு உதவி செய்தவர் நமது அன்புக்குறிய சீத்தாம்மா (திருமதி. சீதாலட்சுமி) சென்ற ஆண்டு 2011 மார்ச் மாதம் நான் தமிழகம் சென்றிருந்த போது சரித்திர ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்து ராஜூக்கள் சமூகத்தைப் பற்றியும் ராஜபாளையம் பருத்தி உற்பத்தி பற்றியும் கேட்டு அறிந்து கொண்டேன். அதனை ஒலிப்பதிவாக பதிவாக்கியுள்ளேன். இந்தப் பதிவில்


  • ராஜூக்கள் தெலுங்கு பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள்
  • இவர்கள் 400 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தமிழகத்துக்குப் பாளையக்காரர்களாக வந்தவர்கள்
  • விவசாயத்தில் முதலில் ஈடுபட்டாலும் பின்னர் பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
  • இன்னமும் ராஜபாளையத்தில் சத்திரிய ராஜூக்கள் என்ற ஒரு குடியினர் இருக்கின்றனர்
  • இங்கே வலங்கை என்ற பெயரிலேயே ஒரு கோயில் இருக்கின்றது
என்பதோடு மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


இந்தப் பேட்டியின் போது எங்களுடன் எழுத்தாளர் மதுமிதாவும் உடன் வந்திருந்தார். திரு.நடேச நாடாரின் இல்லத்தில் இப்பேட்டியை நாங்கள் பதிவாக்கினோம்.திரு.ராமச்சந்திரன் விளக்கம் தர அவ்விளக்கங்களுக்கு மேலும் தகவலை வழங்கி இப் பேட்டிக்குச் சிற்ப்பு சேர்க்கின்றனர் மதுமிதாவும் சீதாம்மாவும். 



சுதந்திர போராட்ட காலகட்டத்தில் காந்தி ராட்டினத்தை அறிமுகப்படுத்திய போது ராஜபாளையத்து பருத்தியில் நெய்யப்பட்ட கதர் ஆடை சிறப்பானது என காந்திஜி சொன்னதாகவும் இப்பேட்டியில் மதுமிதா குறிப்பிடுகின்றார்


இப்பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திருமதி. சீத்தாலட்சுமி, எழுத்தாளர் மதுமிதா, சுபா, திரு.நடேச நாடார்,திரு.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர்.






அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஈழத்துப்புலவரின் தமிழ்த்தாய் வாழ்த்து

புலவர் சிவநாதனின் தமிழ்மொழி வாழ்த்து!

சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
சிந்தையில் நிறைந்த அவள் வாழி
போருடைப் புறமும் அன்புடை யகமும்
போர்த்த பேரழகாள் புகழ் வாழி!

ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
சாரமாய் வடிந்த காவியச் சோலையில்
களி நடம் பயின்றவள் பேர் வாழி!

ஏருடை நிலமுங் காருடை வளமும்
தாருடை அரசும் இல்லாமல்
பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
வீறுடைச் செல்வியாய் அவள் வாழி

இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா.

பாடல் கேட்க!

தேர் அ(ரி)றிந்தோர்

தேரில் என்னென்ன சிற்பங்கள் உள்ளன?
எத்தனை அடுக்குகளாகச் சிற்பங்கள் உள்ளன?
காமம் பற்றிய சிற்பங்கள் ஏன் இடம் பெறுகின்றன?

கும்பகோணம் ஸ்தபதியார் திரு.இரா.பிரபாகரன் அவர்கள் தேரில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்த ஒலிப்பதிவை இணைத்துள்ளேன்.

பதிவைக் கேட்க!


காளைராசன்

உலோகச் சிலை செய்யும் முறை


கும்பகோணம் ஸ்தபதியார் இரா.பிரபாகர் அவர்கள் திருப்பூவணம் அருள்மிகு மின்னம்மைக்கான வெள்ளியங்கியைச் செய்து கொடுத்தார்.

வெள்ளியங்கியைப் பெற்றுக் கொண்டு, அவருடன், கடந்த பங்குனி மாதம் 20 ஆம் நாள் திங்கள் கிழமை (02/ஏப்ரல்/2012) அன்று மானாமதுரை வேதியாரேந்தல் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக ப்ரித்யங்கிரா தேவி கோயிலிலிருந்து திருப்பூவணத்திற்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது உலோகத்தினால் சிலைகள் செய்யும் முறைபற்றி அவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன்.

பதிவைக் கேட்க!

கி.காளைராசன்
kalairajan26@gmail.com

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness